தமிழக அரசு மக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் ஒன்றை அமுல்படுத்தி வருகிறது; ஆண்டு வருமானம் ரூ 72000 வரை உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் ரூ 1 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியும். ஆந்திராவில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி கொண்டு வந்த திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இத்திட்டம் கலைஞர் காப்பீட்டு திட்டம் என்றழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுகிற இத்திட்டத்திற்கு கலைஞர் காப்பீடு திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது எவ்வகையிலும் முறையற்றது. தமிழக மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் இத்திட்டத்திற்கு ஒன்று தமிழக அரசு காப்பீடு திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும்; அல்லது மக்கள் காப்பீடு திட்டம் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏதோ கருணாநிதி தனது சொந்த பணத்தில் காப்பீடு திட்டம் வழங்கியிருப்பது போல மக்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை உருவாக்கும் வகையில் கருணாநிதி தன் பெயரிலேயே கலைஞர் காப்பீடு திட்டம் என்று பெயர் சூட்டி மக்கள் வரிப்பணத்தில் தனக்கு தானே விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் முதல்வராயிருந்த போது அனைவருக்கும் இலவசக் கல்வி திட்டம் கொண்டு வந்தார்; இலவச மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார்; தமிழகமெங்கும் தொழிற்சாலைகள் அமைத்தார்; பல்வேறு அணைக்கட்டுகளை கட்டினார்; இது மட்டுமின்றி இன்னும் அவர் புரிந்த சாதனைகள் ஆயிரம் ஆயிரம். ஆனால் ஒரு திட்டத்திற்கு கூட அவர் தன் பெயரையோ தன் தாயார் அல்லது தன் உறவினர்கள் பெயரை சூட்டியதில்லை. ஆனால் கருணாநிதி...?
மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் காப்பீடு திட்டத்திற்கு தன் பெயரை சூட்டிக் கொண்டு இத்திட்டத்தை விளம்பரப்படுத்துதல் என்ற பெயரில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இலட்சக் கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவளித்துக் கொண்டிருக்கிறார்.
நினைவேறுகிறது…